DOWNLOAD OFFICIAL APP - CLICK HERE
தமிழக விவசாயிகளுக்கு இ-அடங்கல்: ஜூலை முதல் அமலுக்கு
வருகிறது இந்தியாவிலேயே முன்மாதிரியாக, தமிழகத்தில் விவசாயிகளுக்கு இ-அடங்கல் வழங்கும் திட்டம்
ஜூலை முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில்
தமிழகத்தில் முதல்கட்டமாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை பயிற்சி
வகுப்பு நடைபெற்றது. அரசு கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் கே.சத்யகோபால் (படம்),
மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, வேளாண், தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்று,
இ-அடங்கல் செயல்பாடுகள் குறித்து ஒளிக்காட்சி மூலம்
விளக்கம் அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் சத்யகோபால் கூறியது:
நாட்டிலேயே பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில்
இ-அடங்கல் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆந்திரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இ-அடங்கல் திட்டம்
இருந்தாலும் அவற்றை அதிகாரிகள் மட்டுமே செயல்படுத்த முடியும். ஆனால்,
தமிழகத்தில்தான் விவசாயிகளும் இத் திட்டத்தில் பதிவு செய்து
அரசு வழங்கும் சலுகைகளை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயி ஒவ்வொருவருக்கும் தனித்தனியே குடிமக்கள் கணக்கு எண்
வழங்கப்படும். அரசின் சேவைகளை இணைய வழியாக பெற்ற ஒவ்வொருவருக்கும் இந்த எண்
வழங்கப்பட்டிருக்கும். இந்த எண் இல்லாவிட்டால் புதிதாகப் பதிவு செய்து பெற்றுக்
கொள்ளலாம்.
இந்த எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு விவசாயியும்
எந்தெந்த பருவத்துக்கு, எந்த வகையான பயிரை, எவ்வளவு பரப்பில் பயிரிட்டுள்ளோம் என்பதை நேரடியாக பதிவு
செய்யலாம்.
இந்த பதிவு கிராம நிர்வாக அலுவலருக்கு சென்று கள ஆய்வு
செய்து சரியாக இருந்தால் அனுமதிக்கப்படும். விவசாயி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரது பதிவுகளில் முரண்பாடு
இருந்தால் நேரடியாக வருவாய் ஆய்வாளருக்கு செல்லும். அதிலும் முரண்பாடு இருந்தால்
துணை வட்டாட்சியருக்கு செல்லும். கிராம நிர்வாக அலுவலர் முதல் ஆட்சியர் வரையில்
இந்த பதிவை சரிபார்த்து இறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, பயிரைப் பூச்சி தாக்கியோ, வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அவற்றை புகைப்படம் வழியாக
இ-அடங்கலில் பதிவு செய்யலாம். புகைப்படம் பதிவு செய்த தேதி,
நேரம் உள்ளிட்டவற்றையும் துல்லியமாக அறியலாம். இந்த
முறையானது வேளாண்மைத்துறையில் புதிய கொள்கைகளை கொண்டுவர உபயோகமாக அமையும். மாநிலம்
முழுவதும் எந்தப் பகுதியில், எந்த பயிர், எவ்வளவு பரப்பு என்பதை எளிதில் கணக்கிடலாம். அறுவடை
விவரங்களையும் அறிய முடியும் என்றார் அவர்.
செல்லிடப்பேசியைப் பயன்படுத்தலாம்: இந்த அடங்கல் வழங்கும்
முறையானது இதுவரை எழுத்துப் பூர்வமாக வருவாய்த்துறையினரிடம் நேரில் பெற
வேண்டியிருந்தது. அடங்கல் நகல் இருந்தால்தான் பயிர்க்கடன்,
மானியம், அரசு நலத்திட்ட உதவிகள், வறட்சி, வெள்ள நிவாரணம், பூச்சித் தாக்குதலுக்கு நிவாரணம் மற்றும் இதர அனைத்துவகை
பயன்களையும் பெற முடியும். பல நேரங்களில் கிராம நிர்வாக அலுவலர்,
வருவாய் ஆய்வாளர் அலுவலகம் என விவசாயிகள் மாதக்கணக்கில்
அலைந்து திரிந்தாலும் அடங்கல் நகல் கிடைப்பது அரிதான காரியமாக இருந்து வந்தது. இனி,
விவசாயிகள் தங்களிடமுள்ள ஆன்ட்ராய்டு வசதியுடைய
செல்லிடப்பேசியிலேயே அடங்கல் விவரங்களைப் பதிவு செய்ய முடியும். இத்தகைய செல்லிடப்
பேசி இல்லாத விவசாயிகள் அந்தந்த கிராமத்தில் உள்ள அரசின் இ-சேவை மையங்களுக்கோ,
தனியார் இணையதள மையங்களுக்கோ சென்று இணைய வசதியை
பயன்படுத்தி இ-அடங்கல் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment