ஆயுஷ்மான் பாரத் திட்ட
பயனாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஆகின்ற செலவுகள் மட்டுமல்லது
அதற்கு பின்னர் ஏற்படுகிற மருத்துவச் செலவுகளும் அளிக்கப்படும்.
ஆயுஷ்மான்
பாரத் திட்டத்தின் மூலம், ஆண்டு ஒன்றுக்கு
ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 லட்சம் ரூபாய் வரையில் ஏற்படும்
மருத்துவச் செலவுகளை இந்திய அரசே ஏற்றுக்கொள்ளும். தீனதயாள் உபாத்யாயா பிறந்த
தினமான செப்டம்பர் 25-ம் தேதி முதல் இந்தத் திட்டம்
நடைமுறைக்கு வர உள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் யாரெல்லாம் சிகிச்சை பெற முடியும், எந்தெந்த மருத்துவமனைகளின்கீழ் சிகிச்சை பெற முடியும் என்பது உள்ளிட்ட 10 விஷயங்கள் இங்கே...
* ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த 8.03 கோடி
குடும்பங்களையும், நகர்ப்புறங்களில் உள்ள 2.33 கோடி தொழிலாளர் குடும்பங்களையும் இலக்காகக்கொண்டு, அவர்கள்
பயனடையும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
* ஏறக்குறைய
நாடு முழுவதும் உள்ள அனைத்து இரண்டாம் நிலை தாலுகா மருத்துவமனைகள், மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் மருத்துவச் சிகிச்சையைப் பெறலாம். இந்தத்
திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறுவதற்கு, குடும்ப
உறுப்பினர்களின் எண்ணிக்கை, வயது, பாலினம்
போன்ற எதுவும் தடையில்லை.
*
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றுள்ளவர்களின் அடையாளத்தின்
பேரில், இந்தத் திட்டத்துக்குப் பதிவுசெய்யலாம். இதன்கீழ்
பயன்பெற, ஆதார் கட்டாயமில்லை.
* பயனாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஆகும் செலவுகள்
மட்டுமல்லாது, அதற்குப் பிறகு ஏற்படும் மருத்துவச்
செலவுகளும் அளிக்கப்படும். மருத்துவமனைக்கு வந்து செல்லும் போக்குவரத்துச்
செலவுகளும் குறிப்பிட்ட வரையறைக்குள் வழங்கப்படும். சிகிச்சைக்கான செலவு
பரிவர்த்தனைகள் அனைத்தும் பணமில்லா பரிமாற்றமாகவே இருக்கும்.
*
பயனாளிகள் அனைவருக்கும் பிரதமரிடமிருந்து தனிப்பட்ட கடிதங்கள்
வரும். மேலும், QR கோடுகளுடன்கூடிய கார்டும் வழங்கப்படும்.
இதன்மூலம் பயனாளியின் அடையாளம் மற்றும் சிகிச்சைப்பெற தகுதியுடையவரா என்பது
குறித்து சரிபார்க்கப்படும்.
* இந்தத்
திட்டத்தின்கீழ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மூட்டுமாற்று அறுவைசிகிச்சை
உள்ளிட்ட 1,354 சிகிச்சைத் திட்டங்கள் 20 சதவிகித விலை குறைவுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
* சிகிச்சை பெற விரும்புபவர்களுக்கு உதவுவதற்காக 14555 என்ற தொலைபேசி ( ஹெல்ப்லைன்) எண்ணும், mera.pmjay.gov.in என்ற இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளன.
* தகுதி
வாய்ந்தவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் பட்டியலில் இடம்பெற்றுள்ள தனியார்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இந்தத் திட்டத்துக்கான செலவில் 60 சதவிகிதத்தை மத்திய அரசும், 40 சதவிகிதத்தை மாநில
அரசும் பகிர்ந்துகொள்ளும்.
*
இந்தத் திட்டத்துக்காக 8,735-க்கும்
அதிகமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. நாடு
முழுவதிலும் சுமாா் 15 ஆயிரம் மருத்துவமனைகளிலிருந்து இந்தத்
திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அவற்றில் 7,500 விண்ணப்பங்கள் தனியாா் மருத்துவமனைகளில்
இருந்து வந்துள்ளன.
*
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசுடன் புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதேசமயம் தெலங்கானா, ஒடிசா,
டெல்லி, கேரளா, பஞ்சாப்
ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சேரவில்லை. ஆயுஷ்மான்
பாரத் திட்டத்துடன் தமிழக முதலமைச்சரின்
விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில்
பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அவர்களும் 5
லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைப்
பலனைப் பெற முடியும்.